இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் தங்கள் அழகைக் கூட்டுவதற்கு நிறைய நேரம், பணம் செலவு செய்ய தயாராக இருக்கின்றனர். அதிலும், முகத்திற்கு விலை உயர்ந்த க்ரீம், பவுடர் தடவி அழகு பார்ப்பதற்காக பெண்கள் அனைவரும் விரும்புவது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், உடலுக்கு அழகு சேர்ப்பதற்கு வெளிப்புறத்தில் மட்டுமே அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது சிறந்த பலனை தந்து விடாது. நமது உடல் உட்புறத்தில் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி கொண்டால் மட்டுமே நாம் அழகாக இருக்க முடியும். ஆரோக்கியமாக உணவு முறை மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே நம் முகம் பிரகாசமாக ஜொலிக்கும் அழகைப் பெற்றிடும். இப்போது அதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களுக்கு சொல்லப் போகிறேன். உங்கள் அழகை மேம்படுத்த இங்கே கொடுக்கப்பட்டுள்ள 3 வழிமுறைகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதுமானது… வாருங்கள், இப்போது அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…
ஆரோக்கியமான உணவு
சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் இருக்க ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த பட்டியலில் பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், வைட்டமின்-சி நிறைந்த உணவுகள் போன்றவை அடங்கும். இதுவே, சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குவதோடு, இது சருமத்தின் தோற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை சரியாக வைத்திருந்து, சரும சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்க்கும். எனவே, உங்களது அன்றாட உணவுகளில் ஆரோக்கியமான உணவுகளையும், காய்கறி பழங்களையும் சேர்த்து கொள்ள மறவாதீர்கள்.
நேரத்தில் தூங்கி எழுவது
மனித உடலுக்கு போதுமான தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று. அதிலும், நேரத்திற்கு தூங்கி, சீக்கிரம் எழும் பழக்கத்தை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால், உங்கள் சருமம் இன்னும் பளபளப்பாகவும், நீண்ட காலத்திற்கு இளமையாகவும் இருக்கும். உண்மையில், காலையில் வீசக்கூடிய சுத்தமான காற்றை சுவாசிப்பது மிகுந்த நன்மை பயக்கும். இது உடலுக்கு நிறைய ஆக்ஸிஜனைக் கொடுப்பதோடு, புதிய தோல் செல்கள் உற்பத்தி செய்யவும் உதவும். இதன் காரணமாக, தினமும் இரவு 10-11 மணிக்குள் தூங்கி, காலை 5-6 மணிக்கு எழ பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சி
காலை எழுந்து திறந்த வெளியில் நடைப்பயிற்சி செல்வது உங்களை ஒல்லியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், இளமையாகவும், முதுமை தோற்றத்தைத் தள்ளிப் போடவும் உதவிடும். உண்மையில், நமது சருமத்தின் பொலிவும் ஆரோக்கியமும் உடலின் சீரான இரத்த ஓட்டத்தைப் பொறுத்தது. எப்போது நமது சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கவில்லையோ, அப்போது சருமம் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்க முடியாது. எனவே, காலை எழுந்தது முதல் சிறிது நேர நடைப்பயிற்சி, யோகா, லேசான உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வது உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது மட்டுமின்றி முகத்தையும் ஜொலிக்க செய்யும்.